Sunday, 27 October 2013

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் எளிமையான வாழ்க்கை:

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.



இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

"அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்; அப்போது நபித்தோழர்கள், 'நீங்களுமா?' என்று கேட்டார்கள். 'ஆம்! மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந்தேன்!" என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி - 2262. 


அபூ ஹாஸிம் அறிவித்தார்.
பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் புர்தா -- குஞ்சங்கட்டப்பட்ட ஒரு சால்வையைக் கொண்டு வந்தார் என்று ஸஹ்ல்(ரலி) கூறிவிட்டு --"புர்தா என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டபோது (அங்கிருந்தோர்) 'ஆம்! புர்தா என்பது சால்வைதானே! என்றனர். ஸஹ்ல் 'ஆம்' எனக் கூறிவிட்டு மேலும், அப்பெண்மணி 'நான் என்னுடைய கையாலேயே இதை நெய்திருக்கிறேன். இதனை உங்களுக்கு அணிவிக்கவே நான் கொண்டு வந்தேன்" என்றதும் அது தேவையாயிருந்ததால் நபி(ஸல்) அவர்கள் அதைப் பெற்றார்கள். பிறகு அவர்கள் அதைக் கீழாடையாக அணிந்து எங்களிடம் வந்தபோது ஒருவர் 'இது எவ்வளவு அழகாக இருக்கிறது! எனக்கு இதை நீங்கள் அணிவித்து விடுங்கள்" என்று கேட்டார். உடனே அங்கிருந்தோர் 'நீர் செய்வது முறையன்று; நபி(ஸல்) அவர்களுக்கு அது தேவைப்பட்டதால் அதை அணிந்திருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் கேட்பவர்களுக்குக் கொடுக்காமலிருக்க மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே நீர் அதை அவர்களிடன் கேட்டு விட்டீரே' எனக் கூறினார்கள். அதற்கவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அதை (சாதாரணமாக) அணிந்து கொள்வதற்ககாகக் கேட்கவில்லை: அது எனக்கு கஃபனாக ஆகி விடவேண்டும் என்றே கேட்டேன்" என்றார். 'பின்பு அது அவருக்குக் கஃபனாகவே ஆகிவிட்டது" என்று ஸஹ்ல் கூறினார்.
நூல்: புகாரி - 1277.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள் 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்' எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழல் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது' எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள். இதை அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார். நூல்கள் : திர்மிதி 2299.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
பேரீச்சம் நாறினால் நிரப்பப்பட்ட பதனிடப்பட்ட தோலே இறைத்தூதர்(ஸல்) அவர்களின் படுக்கை விரிப்பாக இருந்தது.
நூல்: புகாரி - 6456.

அபூ புர்தா(ரஹ்) அறிவித்தார்.
ஆயிஷா(ரலி) எங்களிடம் ஒட்டுப் போட்ட (கம்பளி) ஆடை ஒன்றை எடுத்துக் காட்டி, 'இதை உடுத்திக் கொண்டிருக்கும்போது தான் நபி(ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள்" என்று கூறினார்கள்.
நூல்: புகாரி - 3108.

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

0 Responses to “ இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் எளிமையான வாழ்க்கை: ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program