Monday, 22 July 2013
ரமலான் சிந்தனைகள் - 3
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
இரவுத்தொழுகை:
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ("அல்அத்தமா" என மக்கள் அழைக்கும்) இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து ஃபஜ்ர் வரையுள்ள இடைப்பட்ட நேரத்தில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள்; ஒவ்வோர் இரண்டு ரக்அத்களுக்கும் இடையில் சலாம் கொடுப்பார்கள்; ஒரு ரக்அத் வித்ர் தொழுவார்கள். தொழுகை அறிவிப்பாளர் ஃபஜ்ர் தொழுகைக்கு அறிவிப்புச் செய்து முடித்து,வைகறை வெளிச்சம் பளிச்சிட்டிருக்க, (தம்மைத் தொழுகைக்கு அழைப்பதற்காக) அறிவிப்பாளர் வரும் போது எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்; பிறகு ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றுவதற்காக (தம்மை அழைக்க) அறிவிப்பாளர் வரும்வரை வலப் பக்கத்தின் மீது சாய்ந்து படுத்திருப்பார்கள்.
நூல்: முஸ்லிம் 1340.
ஸஹர் உணவு:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிலால் அவர்கள், (பின்)இரவில் தொழுகை அறிவிப்புச்செய்வார். எனவே, (ஃபஜ்ர் தொழுகைக்காக) இப்னு உம்மி மக்தூம் செய்யும் தொழுகை அறிவிப்பை நீங்கள் கேட்கும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
துஆ ஏற்கப்படும் நேரம் :
“மூன்று பேர் செய்யும் பிரார்த்தனை நிராகரிக்கப்படமாட்டாது, அவை: நோன்பாளி (நோன்பு வைக்கும் நேரத்திலிருந்து) நோன்பு திறக்கும் வரை செய்யும் பிரார்த்தனை, நீதியான அரசனின் பிரார்த்தனை, அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை (ஆகியனவாகும்.) அவற்றை, அல்லாஹ் மேகத்திற்கு மேல் உயர்த்தி, அவற்றிற்காக வானத்தின் வாசல்களையும் திறக்கிறான். (மேலும் அவர்களுக்காக,) “என் கண்ணியத்தின் மீது ஆணையாக! இப்போது இல்லாவிட்டாலும் பிறகாவது நிச்சயம் நான் உங்களுக்கு உதவி செய்வேன்” என்று இறைவன் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 3598.
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ ரமலான் சிந்தனைகள் - 3 ”
Post a Comment