Monday, 15 July 2013
பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
2:183. ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.
2:185. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப்பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).
97:1. நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
97:2. மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
97:3. கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: ரமலான் மாதத்தின் முதல் இரவு வந்து விட்டால் ஷைத்தான்களும் மூர்க்கத்தனமான ஜின்களும் விலங்கிடப்படுகின்றனர். நரகத்தின் வாசல்கள் மூடப்பட்டுவிடுகின்றன. அவற்றில் ஒரு வாசலும் திறக்கப்படுவதில்லை. சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. அவற்றில் எந்த வாசலும் மூடப்படுவதில்லை. 'நன்மையைத் தேடுபவனே முன்னேறிவா! தீமையைத் தேடுபவனே நிறுத்திக் கொள்!' என்று அழைப்பாளர் ஒருவர் அழைக்கிறார். அல்லாஹ்வால் நரகத்திலிருந்து பலர் விடுவிக்கப்படுகின்றர். இவ்வாறு விடுவக்கப்படுவது (ரமலானின்) ஒவ்வொரு இரவிலுமாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி),
நூல்: திர்மிதி 682, இப்னுமாஜா 1642.
'நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமலானில் நோன்பு நோற்கிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி),
நூல்: புகாரி 38, முஸ்லிம் 760.
ரமலானில் செய்கின்ற உம்ரா ஹஜ்ஜுக்குச் நிகரானது.
நூல்: புகாரி 1782.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் உண்ணாமல் பருகாமல் இருப்பது அல்லாஹ்வுக்குத் தேவையில்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி),
நூல்: புகாரி 1903.
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைக் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம் ”
Post a Comment