Thursday, 20 August 2015

வீட்டுக்குள் விவசாயம்

“தொட்டியில் மண்ணை நிரப்பி நாற்றை நட்டு தண்ணீர் ஊற்றுவதுடன் கடமை முடிந்ததாக நினைக்கும் பலரும், ‘பூ எடுக்கல. காய் அதிகம் பிடிக்கல’ எனப் புலம்புவதைக் கேட்கலாம். ‘நாம் கொடுத்தால் பயிர் நமக்குக் கொடுக்கும்’ என்பதுதான் பயிர்களுக்கான அடிப்படை. அதை மறந்துவிட்டு, ‘நான் எதையும் கொடுக்க மாட்டேன். நீ மட்டும் கொடு’ எனச் செடிகளிடம் கேட்பது எந்த வகையில் நியாயம் நண்பர்களே?
உரமிடு... உயிர்கொடு!
வேளைக்கு உணவு உண்டால்தானே நம்மால் சுறுசுறுப்பாகச் செயல்பட முடிகிறது. அதுபோலத்தான் பயிர்களுக்கும். அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான உரங்களைக் கொடுத்தால்தான் மகசூல் கிடைக்கும்.
வீட்டுத்தோட்டப் பயிர்களுக்கு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஆட்டு எரு, தொழுவுரம், செறிவூட்டிய மண்புழு உரம் ஆகியவற்றில் எதையாவது ஒரு தொட்டிக்கு 200 கிராம் வீதம் காய்ப்பு முடியும் வரை கொடுத்துவர வேண்டும். அப்போதுதான் நல்ல தரமான மகசூலை எடுக்க முடியும். மேலே சொன்ன இயற்கை உரங்களுடன் ஏதாவது ஓர் உயிர் உரத்தை 20 கிராம் அளவில் கலந்து கொள்ளலாம். இது, நுண்ணுயிரிகளை பல மடங்காகப் பெருக்கி, பயிருக்குத் தேவையான சத்துக்களை விரைவாக எடுத்துக் கொடுக்க உதவும்.
முட்டுக்கொடுக்க வேண்டும்!
தக்காளி, கொடிஅவரை, கத்திரி, மிளகாய் போன்ற செடிகள் வளரும்போது, காற்றின் வேகம் மற்றும் காய்களின் எடை போன்ற காரணங்களால் கிளைகள் ஒடிந்தும், தண்டு முறிந்தும் போய்விட வாய்ப்பு இருக்கிறது. எனவே காய் பிடித்தவுடன் குச்சிகளை ஊன்றி, அதில் செடிகளை இணைத்துக் கட்ட வேண்டும்.
சூட்டைத் தடுக்க மூடாக்கு!
வெயில் காலங்களில் செடிகளுக்கு ஊற்றும் தண்ணீரின் பெரும்பகுதி ஆவியாகி விடும். இதைத் தடுக்க... செடிகளின் வேர்பகுதிகளைச் சுற்றிலும் இலைகள், தென்னை மட்டைத்துகள் போன்ற மட்கும் பொருட்களைக் கொண்டு மூடாக்கு அமைக்கலாம். இது, தண்ணீர் ஆவியாவதைத் தடுப்பதுடன் களைகளையும் கட்டுப்படுத்தும். தவிர, இவை மட்கி உரமாகவும் மாறிவிடும்.
அதிகாலைப் பார்வை அவசியம்!
‘கேட்காத கடனும், பார்க்காத பயிரும் கைக்கு வந்து சேராது’ என்கிற பழமொழி வீட்டுத்தோட்டத்துக்கும் பொருந்தும். என்ன வேலை இருந்தாலும் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்து, வீட்டுத்தோட்டத்தை ஒரு பார்வை பார்க்க வேண்டும். அப்போதுதான் புழு, பூச்சிகள் காலை வெயிலுக்காக இலைகள் மீது தவழ்ந்து திரிவதைக் காண முடியும். அவற்றை அப்படியே பிடித்து அழித்து அப்புறப்படுத்த வேண்டும்.
பால்கனியில் பறவைக்கூடு!
வீட்டுத்தோட்டத்தின் சில இடங்களில் அட்டைப்பெட்டி, மூங்கில் தூர் ஆகியவற்றை 10 அடி உயரத்தில் நிறுத்தி பறவைப்பரண் அல்லது பறவைக்கூடுகளை அமைக்கலாம். பரண் தளத்தின் மீது, பறவைகள் குடிக்க வாய் அகன்ற சிறிய பாத்திரத்தில் தண்ணீரும், ஒரு தட்டில் தீனியும் வைத்தால்... தேடிவரும் பறவைகள் தீனியோடு, செடிகளில் மேயும் புழுக்களையும் கபளீகரம் செய்துவிடும். புறநகர் பகுதிகளில் தோட்டம் அமைப்பவர்கள் இதைச் செய்தால் 70 சதவிகிதம் அளவுக்கு புழுக்களைக் கட்டுப்படுத்த முடியும்” என்ற கிருத்திகா கனகராஜ் நிறைவாக,
சொத்தைக்காய், சுத்தக்காய்!
“என்னதான் பராமரிப்பு செய்தாலும் விளையும் காய்கள் சில சொத்தையாவது தவிர்க்கமுடியாத ஒன்று. அப்படிச் சொத்தையாகும் காய்களை வீண் என்று குப்பையில் கொட்டத் தேவையில்லை. சொத்தைக் காய்களும் சுத்தமானதுதான். சொத்தை உள்ள பகுதியை மட்டும் வெட்டி எறிந்து விட்டு அந்தக் காய்களைக் கழுவி சமைக்கலாம். அதுதான் மிகுந்த சுவை கொண்டது. எங்கள் வீட்டுத்தோட்டத்தில் எங்களுக்கு இரட்டை லாபமுண்டு. குறைந்தபட்சம் மாதம் ஆயிரம் ரூபாய் வரை ஏற்பட்ட காய்கறிச் செலவு மிச்சமாகிவிட்டது ஒரு லாபம். அதோடு நஞ்சில்லா காய்கறிகள் கிடைப்பதால், பின்னாளில் ஏற்படப்போகும் மருத்துவச்செலவும் மிச்சம்” என்றார்.
-செழிக்கும்
தொடர்புக்கு,
கனகராஜ்,
செல்போன்: 73737-32236.
http://www.vikatan.com/article.php?module=magazine&aid=105762

0 Responses to “ வீட்டுக்குள் விவசாயம் ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program